வணக்கம்

உங்கள் நண்பனின் கவிதை மழையில் நனைய வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்....!

Thursday, September 19, 2019

நவம்பர் மாதம்

*******

நவம்பர் மாதம்

ஓடியோடி ஒளிந்துக் கொண்டிருந்த
தமிழர்களை காத்திடவே
எழுந்து ஓடி விரட்டிய
வீரப்புதல்வர்களின் மாதம் இது!

சுயநலமில்லாது தமிழினத்திற்காய்
தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காய்
தாங்களே களமிறங்கிய
வீரத்தமிழர்களின் மாதம் இது!

தமிழீழப் பெண்களின்
கற்பினை சூறையாடிய சிங்களவர்களை
வீரத்துடன் வேட்டையாடிய
வீரப்பிள்ளைகளின் மாதம் இது!

சுற்றிலும் எதிரிகளிருந்தாலும்
தமிழர்க்கென்று தேசத்தை கட்டியெழுப்பி
பசியில்லாது இன மொழி உணர்வோடு
தமிழர்களை வளரச் செய்திட்ட
வீரப்புலிகளின் மாதம் இது!


                             

முப்படைகளும் கண்டு
எதிரிகளை விரட்டியடித்து
வெற்றி கொடியேற்றிய
தமிழீழ புலிகளின் மாதம் இது!

அடிமைத் தமிழர்களை
தலை நிமிரச் செய்திட்ட
செயல் வீரராம் வீரத்தின் விளை நிலமாம்
என் அண்ணன் பிறந்திட்ட மாதமும் இதுவே!

Thursday, September 5, 2019

மரம் நடுவோம்........

மழையில்லை மழையில்லை
என புலம்பிடும் மனிதா
மழை குறைந்ததற்கு
காரணமென்ன என்று ஏன்
சிந்திக்க மறுக்கின்றாய்????
சாலை விரிவாக்கமென்ற
பெயரிலும்
நகர விரிவாக்கமென்ற
பெயரிலும்
மரத்தையும் காடுகளையும்
அழித்தால் எங்ஙனம்
மழைப் பொழியும்???
மாதம் மும்மாரி
மழை பொழிந்த
பூமி தான் இன்றும்
ஆனால் மும்மாரி
மழை பெய்யவில்லையே
ஏன் புரியவில்லையா????
இன்று நம்
பார்வையில் பட்டிடும்
மரங்கள் யாவும்
நாம் வைத்தவை அல்லவே
நாளைய சந்ததிக்காய்
நீ எத்தனை
மரங்கள் வைத்துள்ளாய்?????
அரசியல் தலைவர்களின்
பிறந்த நாளில்
நடப்படுகின்றன மரங்கள்
ஆனால் நட மட்டுந்தான்
செய்கின்றனர்...
வளர்ப்ப தில்லையே!!
மனிதரகளே மனிதர்களே
இயற்கையினை நாம்
காத்திட்டால் தான்
இயற்கையும் நம்மை
காத்திடும்!!!!!
நாம் வாழ
இயற்கையினை இன்று
அழித்திட்டால்
நம்மை வாழ்வதற்கே
வழியில்லாது செய்திடும்
இயற்கை!!!!!!
மரங்களை நடுங்கள்
உங்களுக்காக மட்டுமல்ல
நாளைய நம்
சந்ததிக்காகவும்!!!
உங்கள் பிள்ளைகளை
திரைப்பட பாடல்களுக்கு
ஆடச் சொல்லி
ரசிப்பதை விட
மரங்களின் அருமையை சொல்லி
அவர்களின் கரங்களினால்
நட சொல்லி பெருமைப்படுங்கள்!!!
நட்ட மரங்களையும்
காத்திடுங்கள்
உ்ங்கள் பிள்ளைகளைப் போல!!
உங்கள் பிள்ளைகள்
நாளைக்கு குடும்பத்தை
காப்பார்கள் என்றால்
நடுகின்ற மரங்கள்
நாளைக்கு சமூகத்தை
காப்பார்கள் நிச்சயமாக
வளத்துடன் மழையுடனும்!!
மரம் நடுங்கள்
மரங்களை காத்திடுங்கள்!!!

Thursday, August 8, 2019

தவமாய் தவமிருந்து.........

மார்கழி குளிரில்
அதிகாலையில்
நீராடி
ஈரக் கூந்தலுடன்
சாலையில்
நீர்த் துளிகள் சிதறிட
ஆதாம் காலத்து
தேவதையாய்
அன்ன நடை
பயின்று செல்கின்றாள்!!!
அவள் கூந்தலில்
சூடிய மலருக்கும்
மணந்தருகின்றாள்!!!
அவள் காலில்
சுற்றிய கொலுசிற்கும்
சிரிப்பொலி தருகின்றாள்

                                        
நீரின்மேல் தெரிந்திடும்
அ்ல்லி மொட்டாய்
அவள் முகம்
மலர்ந்தும் மலராத
வெட்கத்துடனும்
அவள் விழிகளில்
நாணத்துடனும்
நடக்கின்றாள் முன்னாடி
அவளை பார்த்திட்ட
விழிகளும் செல்கின்றதே
அவள் பின்னாடி!!
நின் வெண்
பற்களை கண்ட
வெண்ணிலவும்
மறைகின்றானடி
வெட்கத்தில்!!!!
உன் ஒளிர்ந்திடும்
விழிகளை காண
ஆதவனும் கிழக்கில்
ஒளிந்து பார்க்கின்றானடி!!!
இறைவனை தரிசிக்க
நீயோ செல்கின்றாய்
உன்னை தரிசித்திட
இளங்காளைகளின் மனங்கள்
உன்னை நாடியே
தவங் கிடக்கின்றது பெண்ணே!!!!!

Tuesday, August 6, 2019

இவனே என் கண்ணன்


மனதின் எண்ணங்களை
கருவாக்கி
தமிழ் மொழியால்
உறுப்புகள் வளர்த்து
கவியெனும் குழந்தையை பிரசவித்து
மென்மேலும் சிந்தனையால்
எழுத்துருக் கொண்டு செதுக்கி
செதுக்கியதை மீண்டுமொரு
முறை மேற்பார்வையிட்டு
குறைகளை நீக்கி
பிறர் பார்வையில் பெருமையடைய
மேடையேற்றுகின்றேன்!!!

என் கோபத்தையும்
என் உணர்ச்சிகளையும்
உணர்வுகளின் தீண்டலையும்
சமூக சாடலையும்
காதலின் பண்பையும்
நட்பின் அன்பையும்
மனைவியின் காதலையும்
ஒருங்கே உருவமாக்குகின்றேன்
இவனே என் கண்ணன்!!!

அழகின் ரசனையையும்
இயற்கையின் அழகினையும்
செயல்களின் வெளிப்பாட்டையும்
எழுத்துக்களால் வடிக்கின்றேன்
கவியெனும் சேயாய்!!
விண்ணின் மழைத்துளி
கண்ட பூமியினைப் போல்
மலர்கின்றேன் நானும்
என் கவிக்குழந்தையினை
மேடையேற்றியவுடன்!!!
தான் பெற்றெடுத்த
குழந்தையினை பிறர்
சான்றோன் எனச்
சொல்லிடும் பொழுது
பெருமிதம் அடைந்திடும்
அன்னையைப் போல்
பெருமைக் கொள்கின்றேன்
என் கவிதைக்கு கிடைத்திடும்
விமர்சனங்கள் கண்டு!!
நான் எழுதிடும்
சொற்களின் கூட்டணி
கவிதையா யென்பதை
நானறியேன் ஆனால்
என் மனதின் வெளித்திரையே
இவன்…. இவனே
என் கண்ணன்

Wednesday, July 10, 2019

தடையுடை பெண்ணே..........

பெண்ணே பெண்ணே
உன்முன் இருப்பதெல்லாம்
கற்களே…… கற்களை
மேலே உயர்த்துவதும் நீயே
கீழே தாழ்த்துவதும் நீயே!!!
உயிரில்லாத கற்களடா அவைகள்
அவற்றினைக் கண்டு
அஞ்சிடாதே பெண்ணே!!
பெண்ணே நீயும் சக்தியடி
கல் இல்லையடி!!!
தட்டி தட்டி எடு கல்லினை
துணிந்து நின்று உயர்த்திடு
உனக்கு தேவையென்றால்!!
எட்டி எட்டிப் பிடித்து கல்லினை
கீழே வைத்திடு உன்
கரங்களின் கீழே
அஞ்சிடாதே அஞ்சிடாதே பெண்ணே
கற்கள் உயரமாய் போகின்றதென்று
உயர உயர பறந்தாலும்
கல் கழுகாய் ஆகாதடி பெண்ணே!
மீண்டும் உன் கரத்திற்குள்ளேயே
வந்திடுமே பெண்ணே!!


பெண்மையின் தரத்தை
அறிந்திடாத மூடர்களும்
உயிரில்லாத கற்களே!!
பெண்மையின் இதயத்தை
உணர்ந்திடாத இழிவர்களும்
உயிரில்லாத கற்களே!!
பெண்ணே உன்னை
தனிமைப்படுத்திட்டால்
ஜெயித்திடலாம் என்று
பகல்கனவு கண்டிடும்
மூடர்களுக்கு புரிய வைத்திடு பெண்ணே
தனிமையில் அல்ல
இவ்வுலகமே
பெண் எனும் சக்தியில்
தானடா சுழலுகின்றது என்பதை
பெண்ணே நீ சக்தியடி
கற்களை கண்டு அஞ்சிடாது
கற்களை உன் விருப்பத்திற்கு
தட்டி தட்டி எறிந்திடு மேலே
எட்டி எட்டி பிடித்து
கீழ்த் தள்ளிடு பெண்ணே

Thursday, May 9, 2019

பெண்ணே........ பெண்ணே


பெண்ணே பெண்ணே
விடியலில்லை என்று
வீழ்ந்திருந்தது போதும்
இயலாதென்று எண்ணி
முடங்கியிருந்தது போதும்!!
புறப்படு புறப்படு
மனமெனும் கதவை திறந்து
புறப்படு புதிய இலட்சியத்தோடு
சோகங்களை அல்ல
துயரங்களை அல்ல
இழப்புகளை அல்ல
இலட்சியங்களை எண்ணி
வீரு நடைப் போடு பெண்ணே!!
தடைகளில்லா பயணம்
சாதனை அல்ல…
தடைகளைக் கண்டு
விலகி ஓடாதே…..
தடை அதை உடை!!!
முயன்றிடு முயன்றிடு
விழுந்தாலும் அஞ்சிடாதே
எழுந்திடு முயன்றிடு
வெற்றி அடையும் வரை
தடை அதை உடை!!!
தோற்றவர்களை அல்ல
சாதித்தவர்களை பார்
இயலாததை சிந்திக்காதே
இயன்றதை சிறப்பாக செய்திடு
நின் விழிகளில்
வெட்கமும் நாணமும்
மட்டுமல்ல
தடைகளை எரித்திடும்
வீர அக்கினியும்
புறப்படட்டும்!!
பெண்ணே பெண்ணே
உன்னால் முடியும்
உன்னால் எல்லால் முடியும்
நீ நினைத்தால்
மண்ணில் மட்டுமல்ல
விண்ணிலும் வெற்றிகொடி யேற்றிடலாம்

Wednesday, May 8, 2019

பெண்ணே நீ சக்தியடி....


பெண்ணே
நீ மலர் மட்டுமல்ல
முள்ளும் உன்னிடமுண்டு

நீ மென்மை மட்டுமல்ல
உறுதியும் உன்னிடமுண்டு

பெண்ணே நீ சக்தியடி
சக்தியில்லாமல் சிவனுமில்லை

உன்னால் முடியும்
பெண்ணே உன்னால் முடியும்
அன்பிற்கு அடிமையாகிடும்
பெண்ணே பெண்ணே
உன் நேசம்
புறக்கணிக்கப்பட்டால்
உன் மதிப்பான
கண்ணீர்களை வீணாக்காதே

உன்னை புறந்தள்ளியவனை
காலடி மண்ணாய்
உதறிவிட்டு முன்னேறு
அவன் பார்வையிலேயே
வாழ்ந்துக் காட்டு
அவன் பொறாமையடைந்திடும் படிக்கு!



கீழிருக்கும் வரை
உன்னை காணாது சமூகம்
மேலே வா
உயர்ந்து வா
முன்னேறி வா
உன்னால் முடியும்
பெண்ணே நீ சக்தியடி

மலராயிருந்தால்
தேனருந்த வந்திடும் வண்டுகள்
முள்ளையும் காட்டு
அன்பு மட்டுமல்ல
அதிகாரத்தையும் காட்டு
பெண்ணே நீ சக்தியடி

ஓர் உயிரையே
பாதுகாத்து
அதை முழுமையாக
உலகிற்கு தருகின்றவள் நீ
உன்னால் முடியும்
பெண்ணே நீ சக்தியடி

உன் விழிகளில்
கனிவும் அன்பும் மட்டுமல்ல
கண்டிப்பும்
எரித்திடும் வீரமும் தெரியட்டும்
கண்ணகியும் ஒரு பெண்
தெரசாவும் ஒரு பெண் தான்
பெண்ணே உன்னால் முடியும்
பெண்ணே நீ சக்தியடி

நீ மென்மையானவள் தான்
ஆனால்
புலியை விட
வன்மம் உள்ளவள் நீ
புன்னகைக்கவும் தெரியும் உனக்கு
எரித்திடவும் தெரியும் உனக்கு
பெண்ணே நீ சக்தியடி!!!

மூடர்களின்
வீண்பேச்சினை
செவிகளில் ஏற்றாமல்
அவற்றிற்கெல்லாம்
பதிலுரைக்காமல்
தலை நிமிர்ந்து வாழடி
பெண்ணே

எரிந்திட பிறந்தவளல்ல நீ
மடமைகளையும்
பேதமைகளையும்
எரித்திட பிறந்தவள் நீ!!!

மதஜாதி பொய்களை
களைந்து
சக்தியெனும் உடையணிந்து வா
நீ வாழலாம்
வானுயர வளரலாம்!!!1

மணந்தவன் மரணித்தாலும்
தலைக் குனியாதே
குனிய குனிய கொட்டுமடி
இவ்வுலகம் உன்னை
தலை நிமிரடி பெண்ணே
வந்து பிறந்துவிட்டாய்
வாழ்ந்துவிடு வாழ்க்கையினை
பிறர்க்காக அல்ல
உனக்காக வாழக் கற்றுக்கொள்

பெண்ணே நீ சக்தியடி

Tuesday, March 26, 2019

எங்கே எனது கவிதை

>>>>>>>>>>எங்கே எனது கவிதை
சரணத்தில் கலந்து
ராகத்தில் மெருகேறிய
என்னிசை இன்று
என்னை மட்டும்
ஒலியில்லா இசையாய்
மாற்றி சென்றதேனோ!
உணர்வில் மறைந்து
உயிரில் ஒன்றிய
என் காதலும் இன்று
உயிரை மறைத்தே
வேடிக்கை பார்ப்பதேனோ!
ஒவ்வொரு இதயத் துடிப்பிலும்
ஜனனமாகிய அவளின் காதல்
இப்பொழுது துடிப்பையே
பாரமாக்குகின்றதே!
ஆழ்கடலில் மூழ்கி
மகிழ்ந்திட்ட கடலுயிரியாய்
சிறந்தே விளங்கிய எங்காதல்
நீரின்றியே சுடுமணலில்
தத்தளித்து துடிக்கின்றதே!
வார்த்தைகளில் சொல்லிட இயலா
அன்பின் ஊற்றானவள் - இன்றைக்கு
என்னை தண்டித்தே தன்னுள்
தன்னை உருக்குவதுமேனோ!
என்னிரவு பொழுதுகளும்
வெண்ணிலா இல்லாத வானமாய்
இருளோடு கழிகின்றதே!
சில்லுசில்லாய் இதயக் குடுவை
உடைந்திட்டாலும் -துகள்கள்
ஒவ்வொன்றிலும் உந்தன்
காதல் நினைவுகள் தானடி!




நடக்கின்றேன் நடைப் பிணமாய்
நிழலை மறந்திட்ட நிசமாய்
உயிரை உணராத ஜடமாய்
சிறகொடிந்த பறவையாய்
வாழ்கின்றேன் நிமிடங்களையும்
யுகங்களாய் எண்ணியப்படியே!
தோல்விகளும் புதியதில்லை
இழப்புகளும் புதியதில்லை
தோல்விகளிலும் தொடர்ந்தட்ட
நம்பிக்கையாய் அவள்காதல்
இன்றைக்கு கானல் நீரானதே!

Wednesday, March 20, 2019

நான் ரசிக்கும் அழகே...........


பாவை உந்தன்
வில் புருவத்தில்
காதலெனும் அன்பேற்றி
பேதை எந்தன்
நெஞ்சில் வீசினாயே!

அழகிற்கு மேலும் அழகாய்
உந்தன் விழிகள்!
விழிகளின் பார்வை எந்தன்
உயிரையும் உறைய வைக்குதடி!

உன்னைக் கண்ட நொடிமுதலாய்
என்னை இழந்தே இருக்கின்றேன்
உந்தன் வெட்கமெனும் ஆடைவிலக்கி
மென்னுதடுகளால் மறுமொழி சொல்லடி!
         

உந்தன் பிறை நெற்றி ரசித்தே
எந்தன் பசியும் மறந்தேனடி!
முகமறைக்கும் விரல்கள்
மென்மையின் உருவகமடி!

Thursday, March 14, 2019

போகுதே......போகுதே....

விழிகளின் முன்னே
பிரிந்து செல்கின்றதே
என்னுயிரும்!
கவிதையாகும் முன்பே
சிதறியே சிதைகின்றதே
என் எழுத்துகளும்!
ஓவியமாகும் முன்பே
காற்றில் கரைகின்றதே
என் தூரிகைகளும்!
சிற்பமாகும் முன்பே
உடைந்து போகின்றதே
என்மன உளிகளும்!
உந்தன் தனிமையிலும்
தொடர்வேன் இனிமையான
நினைவாய்! -
விரைந்தே வந்திடு!

Friday, March 8, 2019

பெண்ணெனும் பேரழகு....

********* பெண்ணெனும் பேரழகு

பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாய்
வாழ்ந்திட்டாலும் நடந்திட்டாலும்
பெண்மையின் குணங்களை
அணிந்து சென்றிடும் பெண்ணே பேரழகு!

அநீதி கண்டு ஒதுங்கி செல்லாமல்
எதிர்த்து நின்று போராடிடும்
இன்றைய நவீன கண்ணகிகளே பேரழகு!



மணமுடித்தவன் சிறு விரிசலென்றாலும்
பேசிடும் தொலைபேசியில் குடும்பத்தை பிரித்திடும்
இழிசெயலுக்கு அடங்கிடாது
எதிர்த்து நின்று போராடி ஒட்டுமொத்த
பெண்ணினத்திற்கும் விடுதலை வாங்கிய
பெண்களே பேரழகு!

கோபத்திலும் வார்த்தைகளை
அடுத்தவர் மனம் புண்படாது பேசிடும்,
துயரங்களை அடுத்தவர் தோளில் ஏற்றிடாது
அடுத்தவர்க்கு ஆதரவாய் வாழ்ந்திடும்
பெண்ணே பெண்களிலெல்லாம் பேரழகு!
 —

Thursday, March 7, 2019

சொல்லாதே யாரும் கேட்டால்

>>>>>>சொல்லாதே யாரும் கேட்டால்

இனியவளே
நம் காதலை
காற்றிடம் சொல்லிவிடாதே
காற்றின் ஈரப்பதம்
மறைந்துவிடுமே!
நம் காதலை
மலரிடம் சொல்லிவிடாதே
மலரும் மணத்தை
இழந்துவிடுமே!


நம் காதலை
நிலவிடம் சொல்லிவிடாதே
நிலவும் தன்னொளியை
அகற்றிவிடுமே!
நம் காதலை
யாரிடமும் சொல்லிவிடாதே!
பொறாமையில் மறைந்திடுமே!

வெறுமையாய் என் வானம்...

உந்தன் மன்னவனின் இதயத்தில்
அடித்திடும் முரசொலிகள்
நின் செவிகளில்
இன்னும் எட்டவில்லையோ அன்பே!
நின் பெயரையே இசைத்திடும்
மன்னவனின் இதயத்தாளம்
உன்றன் மனதை தான் மயக்கவில்லையோ!!
இன்னும் அன்பே!


நிலவில்லாத வானமாய் 
வெறுமையாய் காட்சியளித்திடும் 
என் வாழ்வின் வலிகள்
மங்கை உந்தனுக்கு புரியவில்லையோ அன்பே!

Wednesday, March 6, 2019

பறையடி பெண்ணே...... பறையடி

>>>>>பறையடி பெண்ணே.........

பறையடி பெண்ணே
பறையடி!
ஓட்டுரிமையை விலைப்பேசும்
மாக்கள் திருந்திட பறையடி!
ஓட்டுக்காய் காலில்விழும்
அரசியல் வியாதிகள் நீங்கிட
பறையடி பெண்ணே பறையடி!
ஏழை மக்களின்
வலி உணராது
பணக்கார வர்க்கத்திற்கு
சாமரம் வீசிடும் தலைமைகள்
தலை சாய்ந்திடும் மட்டும்
மதசாதி மோதல்களினால்
ஆதாயந் தேடிடும்
கயவர்களை சமூகத்தை விட்டு
அகற்றும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
உணர்வுகளை மழுங்கடித்து
சாக்கடையில் விழவைத்திடும்
மதுவை அகற்றும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
கவிஞர்களின் பேனா முனைகள்
நடுநிலையோடு சமூகத்தை
சீரமைக்கும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
தமிழகத்தின் வளங்களை
சூறையாடிடும் திருடர்களை
தமிழர்களே விரட்டி அடித்திடும்வரை
பறையடி பெண்ணே பறையடி!
கட்சிக்காரன் அல்ல
சாதிக்காரன் அல்ல
மதத்துக்காரனாய் அல்ல
தமிழர்களாய் மக்கள்
ஒன்றிணையும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!

இனியொரு மீனவன்
சிங்களவனாய் தாக்கப்படுமுன்
பறையடி பெண்ணே பறையடி!
தமிழர்கள்
இன உணர்வோடும்
மொழி உணர்வோடும்
வீறுகொண்டு எழும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!
அநியாயமாய் கொடூரமாய்
கொன்றொழிக்கப்பட்ட
ஈழத்தமிழர்களுக்கு
நியாயம் கிடைக்கும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!



பறையடி பெண்ணே பறையடி!
தமிழகத்தில் தமிழர்கள்
உரிமையோடும் சுதந்திரத்தோடும்
வாழ்ந்திடும் வரையிலும்
பறையடி பெண்ணே பறையடி!

Monday, March 4, 2019

>>>>>>>> என்னோடு வருவாயென.....

>>>>>>>> நீ வருவாயென......

ஆளில்லாத கொடும் எந்தன்
பாலைவன வாழ்விலும்
சிலகாலங்கள் - நிழல்தந்திடும்
மரங்களாய் உன் காதல்!
புரிய வைத்திடவும்
புரிந்துக் கொள்ளவுமே
முயன்றேன் அதிகமாய்
உள்வாங்கிய காதல் அழகே!


அன்றைக்கு தென்றலாய்
வீசிட்ட காதலும் - இன்றைக்கு
காதல் கோட்டையை அசைத்தே
சூறையாடிடும் புயலாய் வீசியதே!
நான் பாடிய குறும்பா
உன் செவிகளில்
எட்டவில்லையே!
நான் எழுதிய கிறுக்கல்கள்
உன் விழிகளில்
பட வில்லையே!
விசமென்று தெரிந்தும்
என்னைத்தேட வைக்கின்றது
உன் மறுதலிப்புகள்!
என்னிலை மறந்தே
உன்னை நெருங்கியே உந்தன்
அன்பினை நாடுகின்றேன்!
உயிரிலும் உணர்விலும்
நினைவிலும் அணுவிலும்
கலந்திட்ட என் காதலை
வார்த்தையில் கொன்றிட நினைப்பதுமேனோ?
பூந்தோட்டத்தில் மலரில்லாத
காம்பாய் நான்மட்டும் தனியே
விழுந்தாலும் - மீண்டும் நீ
வருவா யென்றெண்ணியே
காத்திருக்கின்றேன்!

Wednesday, February 27, 2019

அவளொரு அழகிய ராகம்

>>>>> அவளொரு அழகிய ராகம்

பெண்மையின் உருவமவள்!
சாந்தத்தின் உருவகமவள்!
அன்பின் அர்த்தமவள்!
மென்மையின் பிறப்பிடமவள்!
அழகின் அழகவள்!

கோபத்திலும் அன்பு மாறாதவள்
சண்டையிட்டாலும் பிரியாதவள்
விலகியே நின்றாலும் நெருங்கியிருப்பவள்!
எப்போதும் தாய்மையின் குணமுடையவள்!

அவள் விழிகளில் எப்பொழுதும்
அன்பும் பண்பும் நிறைந்தே
புன்னகை பூத்திடுமே!

அவள் செவ்விதழ்கள்
எப்பொழுதும் மென்மையுடன்
இனிமையாய் உண்மையை மட்டுமே
உரைத்திடுமே!

வாடிடாத மலரவள்
தேய்ந்திடாத நிலவு அவள்!
தெள்தேனினும் சுவையவள்!
எத்தனை முறை
வாசித்தாலும் மீண்டும்
வாசிக்க தூண்டிடும்
கவிதையவள்!
நான் மீண்டும் மீண்டும்
மீட்டிட நினைத்தே
என்னை மறக்க நினைத்திடும்
அவளொரு அழகிய ராகமவள்!

Tuesday, February 19, 2019

ஏனிந்த ராகங்களோ

>>>>>>>ஏனிந்த ராகங்களோ

நிசப்த வனத்திலும்
அமைதியாய் துயில் கொண்டேன்
அவளின் நினைவுகளோடு!
ஒப்பனை யில்லாமலே
அழகாய் வலம்வந்தேன்
அவளோடு பயணித்த
நினைவுகளோடு!
ஓசைகள் இல்லாமலே
ராகங்கள் ரசித்தேன்
அவளின் விழியசைவில்!




துயரிலும் கரம்பிடித்தே
நடத்தியவள் இன்று
என் பாதையென்று சொல்லியே
மாற்று வழியினில்
அவள் மட்டும் தனியாய்!

அன்பின் மொழியால்
காதல் பாடம்
கற்றுத் தந்தவள் ஏனோ
ஸ்வரங்கள் இல்லா
முகாரி ராகத்தை
தந்தே கடக்கின்றாள்!

ஏனிந்த ராகங்களோ
மனதின் வலிகளை
மறந்திடவா அல்லது
மீட்டிடவா!